
கோலாலம்பூர், ஜனவரி -12, பத்து மலை திருத்தலத்தில் உள்ள விநாயகர் கோயில் மண்டபத்தில் DSK குழுமத்தின் ஏற்பாட்டில் தேவார, சமய பாடங்கள், பரதநாட்டியம், தவில், நாதஸ்வரம் போன்ற இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன. இந்த வகுப்புகளை MAHIMA என்றழைக்கப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவக்குமார் நேற்று தொடங்கிவைத்தார்.
சமயத்தையும் கலாச்சாரத்தையும் இலவசமாக மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதே DSK குழுமத்தின் நோக்கமாகும். 2022-ஆம் ஆண்டு 100 மாணவர்களுடன் தேவார வகுப்புகள் தொடங்கப்பட்டன. பின்னர் 250 மாணவர்களுடன் நாடு தழுவிய தேவாரப் போட்டியும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிகளின் பேராதரவால், இந்த இலவச வகுப்புகள் தொடங்கப்பட்டதாக டத்தோ சிவக்குமார் தெரிவித்தார்.
3 மாத காலம் கொண்ட இவ்வகுப்புகளில் வயது வரம்பு இல்லாமல் அனைவரும் பங்கேற்கலாம். விரைவில் திறப்பு விழா காணவிருக்கும் இந்திய கலாச்சார மையத்தில் இப்பயிற்சிகள் நடைபெறும். “பாரம்பரியத்தையும் சமயத்தையும் காக்க இதுபோன்ற முயற்சிகள் அவசியம்,” என டத்தோ சிவக்குமார் கூறியுள்ளார். அனைவரும் பயிற்சிகளில் பங்கேற்று பயனடையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.