
கோலாலம்பூர், 06 நவ. – பூச்சோங் ஜெயா பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டுக் கடையின் படிக்கட்டில் ஆண் ஒருவரின் உடல் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் புதன்கிழமை இரவு சுமார் 8.30 மணியளவில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு வசித்து வந்த சிலர், படிக்கட்டில் ஒரு ஆண் நபர் அசைவின்றி கிடப்பதை கவனித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு செர்டாங் மாவட்ட போலீசார் விரைந்து சென்று விசாரணை தொடங்கினர்.
பொதுமக்கள் தெரிவித்த தகவலின்படி, மரணமடைந்த நபர் வெளிநாட்டுக்காரராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. போலீசார் உடலை மீட்டு பூச்சோங் ஜெயா மருத்துவ மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
செர்டாங் மாவட்டத் தலைவர் முகமட் பாரித் அகமத் கூறியதாவது, “இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. மரண காரணம் குறித்து நீதிமருத்துவ அறிக்கை வெளிவரும் வரை எந்தத் தீர்மானமும் சொல்ல முடியாது,” என தெரிவித்தார்.
புலனாய்வு நாய்களும் (K9) சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆரம்ப கட்ட விசாரணையில், உடலில் சில காயங்கள் காணப்பட்டதால் கொலைக்குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்த சிலரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர். பொதுமக்கள் யாரேனும் சந்தேகத்துக்குரிய நபரை பார்த்திருந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-யாழினி வீரா



