
சிங்கப்பூர், 17 பிப்ரவரி — போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்ற மலேசியர் பன்னிர் செல்வம் பரந்தாமன் (38), வரும் பிப்ரவரி 20 அன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அவரது முன்னாள் வழக்கறிஞர் எம். ரவி தெரிவித்துள்ளார்.
முகநூல் பதிவில், பன்னீரின் சகோதரிக்கு சிறையிலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட கடிதம் வந்துள்ளதாக ரவி குறிப்பிட்டார். 2020 ஆம் ஆண்டில் பன்னீரை நியமிக்கப்பட்ட வழக்கறிஞராக முன்வைத்தபோது, சிங்கப்பூர் சிறை அதிகாரிகள் 13 கைதிகளின் ரகசிய தகவல்களை சட்டவிரோதமாக அட்டர்னி ஜெனரல் அலுவலகத்துக்கு அனுப்பியதாக அவர் கூறினார். இது பல கைதிகள் மற்றும் அவர்களின் வழக்கறிஞர்களுக்கிடையிலான பாதுகாப்பு பெற்ற தகவல்களை உள்ளடக்கியதாக இருந்தது.
இந்த விவகாரத்தில், சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிகாரிகள் சட்டவிரோதமாக செயல்பட்டதாக தீர்ப்பளித்தது. இது சிங்கப்பூரில் மரணதண்டனை நிர்வாகத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. அனைத்துலக சட்டத்தின் அடிப்படையில், வழக்கறிஞர்-வாடிக்கையாளர் உரையாடலில் தலையிடுவது கடுமையான மீறல் எனவும் ரவி தெரிவித்துள்ளார்.
பன்னீர், அதிகாரிகளுக்கு உதவியதாகக் கூறப்பட்டாலும், அரசு தரப்பு இதை உறுதிப்படுத்தத் தவறியது. இதனால், 2017-ல் நீதிபதி கட்டாய மரணதண்டனை விதித்தார். 2014 செப்டம்பர் 3 அன்று உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 51.84 கிராம் டயமார்ஃபின் கடத்தியதற்காக, 2017 ஜூன் 27-ம் தேதி உயர் நீதிமன்றம் பன்னீரை குற்றவாளியாக தீர்ப்பளித்தது.
அனைத்துலக மனித உரிமை சட்டத்தின் அடிப்படையில், மலேசிய அரசு உடனடியாக பன்னீரை காப்பாற்றும் முயற்சியில் இறங்க வேண்டும் என்று ரவி வலியுறுத்தினார்.
-யாழினி வீரா