
கோலாலம்பூர், 26 ஜூன்:மலேசியாவின் கடன் வசூல் தொழில்துறையை ஒழுங்குபடுத்தும் முக்கிய முன்னேற்றமாக, மலேசிய தொழில்முறை கடன் வசூல் முகவர் சங்கம் (APDCAM) இன்று அதிகாரபூர்வமாக உருவாக்கப்பட்டது. இது கடன் வசூல் துறையில் ஒழுங்கு மற்றும் நெறிமுறைகளை வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.
APDCAM-இன் தலைவரான துவான் ஹாஜி ஸாபா ஹஸ்ரின், “இந்த புதிய அமைப்பு, நாட்டில் உள்ள கடன் வசூல் நிறுவனங்களை சட்டத்தையும், நெறிமுறைகளையும் பின்பற்றச் செய்யும் வகையில் வழிகாட்டும்” எனக் கூறினார். மேலும், இது வாடிக்கையாளர்களின் உரிமைகளை மதிக்கும் தொழில்நெறி நடைமுறையை உருவாக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.
அத்துடன், நாட்டின் நுகர்வோர் கடன் மேலாண்மை துறையை மேம்படுத்தும் நோக்கத்தில் அரசு உருவாக்கவுள்ள நுகர்வோர் கடன் ஆணையத்திற்கும் (CCC), APDCAM தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது. இந்த ஆணையம், நுகர்வோர் கடன் சட்டத்தை (CCA) அமல்படுத்தும் பொறுப்பை வகிக்கவுள்ளது.

துவான் ஹாஜி ஸாபா, “இந்த புதிய சட்டம் நிதி துறையில் ஒரு புதிய கட்டத்தை உருவாக்கும். APDCAM உறுப்பினர்களுக்கு வழிகாட்டி, பயிற்சி வழங்கி, இந்த மாற்றத்தை எதிர்கொள்வதில் துணைநிற்போம்” என உறுதியளித்தார்.
இத்துடன் ரு நெறிமுறையுடன் கூடிய, நம்பிக்கையூட்டும் கடன் சூழலை உருவாக்கும் நோக்கத்தில் நாடளாவிய அளவில் உள்ள அனைத்து கடன் வசூல் நிறுவனங்களும் APDCAM-இல் இணையும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,
-வீரா இளங்கோவன்



