
கோலாலம்பூர், செப்டம்பர் 19 – தமிழ்ப்பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை வெளிப்படுத்தும் நோக்கில், 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான பூப்பந்து (Badminton) போட்டி வரும் செப்டம்பர் 27 அன்று நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வை பிரிக்பீல்ட்ஸ் பூப்பந்து சங்கம் முன்னெடுத்து நடத்துகிறது. திறப்பு விழாவை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் சிறப்பாக தொடங்கி வைக்க உள்ளார்.
15 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் 16 ஆட்டக்காரர்கள் இடம்பெறுவர். இதில் 2 இரட்டையர் அணிகள், 3 தனிநபர் ஆட்டக்காரர்கள் மற்றும் 1 மாற்று வீரர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக சங்கத் தலைவர் சேகரன் தெரிவித்துள்ளார்.
ஆண், பெண் பிரிவுகளாக தனித்தனியாக போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டி செராஸ், அரேனா பேட்மிண்டன் டிபிகேஎல் மைதானத்தில் காலை நேரம் துவங்கும்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, இப்போட்டியை பொதுமக்கள் நேரடியாகக் காண அனுமதி வழங்கப்படவில்லை. மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கே மட்டுமே அனுமதி உண்டு என சேகரன் வலியுறுத்தினார்.
பங்கேற்பாளர்களின் உற்சாகத்தை மேம்படுத்தும் விதமாக, அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் நினைவுப் பதக்கம் வழங்கப்பட உள்ளது. மேலும், சிறந்த ஆட்டக்காரர்கள் மற்றும் அணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.
இந்நிகழ்வு, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு மேம்பாடு, ஒற்றுமை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை வளர்க்கும் ஒரு முக்கிய தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலேசிய தமிழ்ப்பள்ளி மாணவர்களின் விளையாட்டு வரலாற்றில் இது மேலும் ஒரு மிகப்பெரிய முன்னேற்றக் கட்டமாக கருதப்படுகிறது.
-யாழினி வீரா



