
சென்னை, 1 நவ. –
இந்திய இசைத்துறையின் பெருமைமிகு நாயகனான இசையமைப்பாளர் இளையராஜா, தனது மறைந்த மகள் பவதாரிணி நினைவாக “பெண்கள் இசைக்குழு” (Girls Orchestra) ஒன்றை தொடங்க முடிவு செய்துள்ளார்.
பவதாரிணி தன்னுடைய வாழ்நாளில் ஒரு பெண்கள் இசைக்குழுவை உருவாக்கும் கனவை பகிர்ந்திருந்ததாக இளையராஜா உணர்ச்சியுடன் தெரிவித்துள்ளார். “என் மகள் பவதாரிணி பலமுறை ‘அப்பா, நம்ம நாட்டில் பெண்கள் மட்டும் சேர்ந்த ஒரு அர்கெஸ்ட்ரா இருக்கணும்’ என்று சொன்னாள். அந்தக் கனவை நான் நிறைவேற்றப் போகிறேன்,” என்று அவர் கூறினார்.
இந்த முயற்சியின் மூலம் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இசை திறமை கொண்ட மாணவிகளுக்கு உலகம் முழுவதும் இருந்து சேரும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இளையராஜா கூறியதாவது, “இது வெறும் இசைக் குழுவல்ல, பெண்களின் திறமைக்கும் மரியாதைக்கும் ஒரு நினைவுச் சின்னம். பவதாரிணியின் ஆன்மா இந்த இசையின் வழியே வாழட்டும்,” என்றார்.
இந்த ‘பெண்கள் இசைக்குழு’ பவதாரிணியின் கனவை நனவாக்கும் ஒரு பெரிய முயற்சியாக ரசிகர்களும் இசை உலகமும் பாராட்டி வருகின்றன.


