
கோத்தா கினாபாலு, 06 நவ. – சாரா கைரீனா மகாதீர் மரணத்தைச் சுற்றியுள்ள விசாரணையில் இன்று முக்கியமான சாட்சி ஒருவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது, சம்பவம் நடந்த ஜூலை 15ஆம் தேதி இரவு, சாரா கைரீனாவை மற்றொரு அறைக்கு அழைத்து சென்று திடீர் சோதனை (ஸ்பாட் செக்) நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
அந்த சாட்சி மாணவி, சாரா படித்திருந்த விடுதி பள்ளியிலேயே கல்வி பயிலும் ஒருவராக இருப்பதாகவும், ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் சில மாணவிகள் இணைந்து அந்தச் சோதனையை மேற்கொண்டதாகவும் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “சோதனையின் போது சாரா கைரீனாவின் லாக்கர் மற்றும் பொருட்கள் சரிபார்க்கப்பட்டன. ஆனால், அப்போது எதுவும் அசாதாரணமாக தோன்றவில்லை,” என கூறினார்.
சாட்சியாளர் தனது வாக்குமூலத்தில், அந்தச் சம்பவத்தின் போது தானும் குழுவில் இருந்தாலும், சாராவை நேரடியாகத் தொடவோ அல்லது அவளை எதிர்கொள்ளவோ இல்லை என்றும் கூறினார். அதேசமயம், சில மாணவிகள் சுற்றி நின்று பேசிக்கொண்டிருந்ததை தூரத்திலிருந்து பார்த்ததாகவும் தெரிவித்தார்.
இவ்விசாரணை சாரா கைரீனாவின் மரணம் தற்கொலையா அல்லது வேறு காரணமா என்பதைக் கண்டறிவதற்காக நடந்து வருகிறது. பொதுமக்கள் இந்த வழக்கை தீவிரமாகக் கவனித்து வருகிறார்கள். மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் விடுதி ஒழுங்குகள் தொடர்பாக கல்வி அமைச்சு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
-யாழினி வீரா



