
சுங்கை பெட்டானி, 7 நவ. – தாமான் ரியா ஜெயா இடைநிலைப் பள்ளியில், மாணவர்களின் சுய விழிப்புணர்வை மேம்படுத்தும் முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைப் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்ததுடன், ஆசிரியர் திருமதி ரத்னா தேவி முருகையா அவர்களின் முயற்சியால் செயல்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முக்கிய உரையாளராக கலந்து கொண்டவர் டாக்டர் எம்.ஏ. லிங்கேஸ்வரன் மணியம். அவர் தனது உரையில் நடுத்தரக் குடும்ப வாழ்வியல், சமநிலையான படிப்பு முறை, ஒழுக்கம் மற்றும் தினசரி வாழ்க்கையில் தொடர்ச்சியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுடன் சுவாரசியமாக விவாதித்தார்.

தொடக்கத்தில் இரண்டு மணி நேரம் என திட்டமிடப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி, மாணவர்களின் தீவிர ஈடுபாடு காரணமாக இரண்டு மணி நேரம் முப்பது நிமிடங்களுக்கு நீண்டது. மாணவர்கள் நகைச்சுவையுடன் தங்கள் கருத்துகளை பகிர்ந்ததோடு, உறுதியான சிந்தனைகளையும் வெளிப்படுத்தினர்.
டாக்டர் லிங்கேஸ்வரன் தனது முகநூல் பதிவில், “இந்த முகாம் மூலம் மாணவர்களின் கல்வி, சமூக மற்றும் குடும்ப பின்னணியைப் பற்றிய ஒரே மாதிரியான எண்ணங்கள் முறியடிக்கப்பட்டன” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த முகாம், மாணவர்களின் சிந்தனை திறனை விரிவுபடுத்தி, அவர்களை நேர்மறை எண்ணங்களுடன் எதிர்காலத்துக்குத் தயார்படுத்தும் வகையில் அமைந்தது என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
-யாழினி வீரா



