
கோலாலம்பூர், 4 செப்டெம்பர் :- கோலாலம்பூரின் சிறப்பு நிகழ்ச்சி தளமான அகசியாதா அரீனாவில் வரும் செப்டம்பர் 6, 2025 அன்று நடைபெறவுள்ள “வித்யாசாகர் ரீவிசிட்” கச்சேரிக்கு இசை ரசிகர்களின் ஆர்வம் உச்சத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாள்களில் துவங்கவிருக்கும் இந்நிகழ்வில், தமிழ்த் திரையிசையின் புகழ்மிகு இசையமைப்பாளர் வித்யாசாகர் நேரடியாக மேடையில் இசை விருந்தளிக்கிறார் என்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கு முன்னர், 2023 அக்டோபர் 14 அன்று நடைபெற்ற “தி நேம் இஸ் வித்யாசாகர்” கச்சேரி பெரும் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்களுக்கு புதுமையான அனுபவம் தரும் வகையில் இம்முறை வித்யாசாகர் இன்னும் வித்தியாசமாக இசை நிகழ்த்த உள்ளார்.

நிகழ்ச்சியில், பல்வேறு புகழ்பெற்ற தமிழ் திரைப் பாடகர்கள் மேடையில் குரல் கொடுத்து, வித்யாசாகரின் மறக்க முடியாத இசை படைப்புகளை நேரடியாக ரசிகர்களுக்கு வழங்கவுள்ளனர். இதனுடன், மலேசியாவின் முன்னணி இசை குழுவான யோகி பி மற்றும் நட்சத்திரா பங்கேற்று நிகழ்ச்சிக்கு தனித்துவமான ஒலியைச் சேர்க்கவுள்ளனர். மேலும், தனது பிரபலமான “செரும்புன்” பாடலால் அனைவரையும் கவர்ந்த மிமிப்ளையும் வித்யாசாகருடன் இணைந்து மேடையில் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

இக்கச்சேரியை, மலேசியாவில் சிறந்த தரத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்திவரும் வீனஸ் புரொடக்ஷன் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. குறையற்ற ஏற்பாடுகளால், உலகத் தரத்திலான அனுபவம் ரசிகர்களுக்கு வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாள் மட்டுமே உள்ள நிலையில், டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இன்னும் முன்பதிவு செய்யாத ரசிகர்கள் உடனடியாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. “வித்யாசாகர் ரீவிசிட் கச்சேரி” ரசிகர்களின் நினைவில் வாழ்நாள் முழுவதும் நிற்கும் இசை விருந்தாக அமையும் என்பது உறுதி.
-யாழினி வீரா


