
சிப்பாங், 24 ஜூன்: ஈரான்-இஸ்ரேல் இடையிலான பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டிலிருந்து பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்ட 24 பேர் முன்தினம் இரவு மலேசியா திரும்பினர்.
மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MH781 என்ற விமானம், இரவு 11.03 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) முனையம் 1-இல் தரையிறங்கியது.
இந்த குழுவில் 17 மலேசியர்கள், மலேசியாவில் வாழும் ஆறு ஈரானியர்கள் மற்றும் ஒரு சிங்கப்பூர் பிரஜை உள்ளடங்குகின்றனர். அவர்களை வெளியுறவு அமைச்சக துணைப் பொதுச் செயலாளர் (இருதரப்பு விவகாரங்கள்) டத்தோ அகமட் ரோஜியன் அப்துல் கானி நேரில் வரவேற்றார்.
இதற்கிடையே, இன்னும் 12 மலேசியர்கள் ஈரானில் உள்ளதாகவும், அவர்களின் நிலைமையை மலேசிய தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் ஈரானுக்கான தூதர் கைரி உமர் தெரிவித்துள்ளார்.
மக்களின் பாதுகாப்பு முன்னுரிமையாகக் கருதப்படும் நிலையில், மீதமுள்ளவர்களும் விரைவில் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
-ஸ்ரீ



