
கோலாலம்பூர், ஜூன் 26:
முன்னாள் கோலாலம்பூர் பொதுப்பணித் துறை (JKR) இயக்குநர் டத்தோ இர். நார்மன் முகமட் ரபானி (51), கட்டிட பராமரிப்பு திட்டம் தொடர்பாக RM70,000 லஞ்சம் பெற்றதாக சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்தார்.
பொதுப்பணிகள் தொடர்பான பணிகளில் சலுகை பெற்ற நபரிடமிருந்து, 2024 ஆகஸ்ட் 10 முதல் 2025 ஜனவரி 23 வரை, கோலாலம்பூரிலுள்ள ஒரு வணிக வளாகத்தில் இந்த தொகையை பெற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது, மலேசிய குற்றவியல் சட்டத்தின் 165வது பிரிவின் கீழ், இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கக்கூடிய குற்றமாகும்.
துணை அரசு வழக்கறிஞர் நத்ரா பறீஹா அவருக்கு RM25,000 ஜாமீன் வழங்கும் முன்மொழிவுடன் மூன்று கூடுதல் நிபந்தனைகளையும் கோரினார். ஆனால், வழக்கறிஞர் அப்துல் ஹகீம் ஐமான், நார்மன் நான்கு குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர்களுக்குப் பொறுப்பேற்று வருவதாகக் கூறி, குறைந்த ஜாமீன் தொகைக்கு கோரிக்கை விடுத்தார்.
நீதிபதி சுசானா ஹுசேன், RM20,000 ஜாமீன் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்துடன், குற்றச்சாட்டுகள் தொடர்பான வரவிருக்கும் விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-யாழினி வீரா



