
கோலாலம்பூர், அக். 29 – மலேசியாவின் முன்னணி ஊடக நிறுவனமான தேசம் ஊடகம் நடாத்தும் 2025 ஆம் ஆண்டுக்கான தேசம் அனைத்துலக ஐகோன் விருது விழா நவம்பர் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு பத்து கேவ்ஸ் Shenga Convention Hall மண்டபத்தில் மிகுந்த சிறப்புடன் நடைபெறவுள்ளதாக அதன் நிறுவனர் குணாளன் மணியம் தெரிவித்தார்.
இந்த ஆண்டு தனது 17ஆம் ஆண்டு நிறைவை எட்டும் தேசம் ஊடகம், வணிகம், கலை, ஊடகம் மற்றும் சமூக சேவை போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கும் 50 திறனாளிகளை தேர்ந்தெடுத்து கௌரவிக்கத் திட்டமிட்டுள்ளது. இவ்விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
2009இல் வார இதழாக துவங்கிய தேசம் ஊடகம், 2015இல் இணைய தள ஊடகமாக வளர்ச்சி பெற்று தற்போது மலேசியாவைத் தாண்டி இந்தியாவிலும், குறிப்பாக சென்னை மற்றும் திருவண்ணாமலை போன்ற நகரங்களிலும் தனது விருது விழாக்களை நடத்தியுள்ளது.
மலேசியாவில் பல துறைகளில் திறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவித்த முதல் ஊடக நிறுவனமாக தேசம் ஊடகம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. இதுவரை சுமார் 1,000 பேர் தேசம் விருதுகளைப் பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டின் விழாவில் புதியதாக அறிமுகமாகும் ‘தேச தளபதி’ விருது, துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே பிரமுகருக்கே வழங்கப்படவுள்ளதாக குணாளன் மணியம் தெரிவித்தார்.
-யாழினி வீரா



