Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

மலேசியா கால்பந்து வளர்ச்சியில் துணைபுரியும் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் – FAM வரவேற்பு

Picture : FAM

கோலாலம்பூர், 31 ஜனவரி — மலேசியா கால்பந்து கழகம் (FAM) ஜோகூர் டாருல் தக்ஜிம் (JDT) உரிமையாளர் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் அளித்த கருத்துகளை மதிப்பதாகவும், மலேசியா கால்பந்து வளர்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்பை பாராட்டுவதாகவும் FAM துணைத் தலைவர் டத்தோ எஸ். சிவசுந்தரம் தெரிவித்தார்.

துங்கு மக்கோத்தா இஸ்மாயில் “FAM-க்கு உட்பட்டதாக இல்லாமல், ஒரு தனித்துறையாக நடுவரணி செயல்பட வேண்டும்” என்ற தனது யோசனையை முன்வைத்துள்ளார். இதனை FAM மிகக் கவனமாக பரிசீலிக்கப் போவதாக சிவசுந்தரம் கூறினார். “இது ஒரு முக்கியமான யோசனை. மலேசியா லீக்கில் நடுவர்களுக்கான ஒரு சுயாட்சி அமைப்பை உருவாக்குவது குறித்து நாங்கள் திறந்த மனதுடன் ஆலோசிக்கிறோம்” என்றார்.

மேலும், “நடுவர் தீர்ப்புகளால் குழுக்கள் எதுவும் மனநிறைவு அடையவில்லை என்றால், அவர்கள் தங்களே வெளிநாட்டு நடுவர்களை நியமிக்கலாம்” என துங்கு மக்கோத்தா இஸ்மாயில் முன்மொழிந்துள்ளார். இதற்கு பதிலளித்த சிவசுந்தரம், “குழுக்கள் வெளிநாட்டு நடுவர்களை நியமிக்க விரும்பினால், அதற்கான அனைத்து செலவுகளையும் தாங்களே ஏற்க வேண்டும். FAM அல்லது MFL இதற்காக எந்த நிதியையும் வழங்காது” என்று தெளிவுபடுத்தினார்.

FAM நடுவர்களின் செயல்பாடு 2024-2025 கால்பந்து சீசனில் சிறப்பாக இருப்பதாகவும், VAR தொழில்நுட்பத்தின் ஆதரவுடன் நல்ல தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். 161 போட்டிகளில் இருந்து வெறும் 4 முறையே எழுத்துமூலம் புகார் பெறப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டார். FIFA, AFC ஆகியவை மலேசிய நடுவர்களை அங்கீகரித்துள்ளன, மேலும், நஸ்மி நசாருடின் 2026 உலகக் கோப்பை நடுவராக பரிசீலிக்கப்படுகிறார் என்றும் கூறினார்.

மலேசியா கால்பந்து வளர்ச்சி நிதி நிலைத்தன்மை மற்றும் தொழில்முறை மேலாண்மையை சார்ந்துள்ளது என தெரிவித்த சிவசுந்தரம், “FAM எப்போதும் கட்டுமானமான யோசனைகளை வரவேற்கும், இதில் துங்கு மக்கோத்தா இஸ்மாயிலின் அறிவுரைகளும் அடங்கும்” என்று உறுதி அளித்தார்.

-வீரா இளங்கோவன்

Scroll to Top