
கோலாலம்பூர், 7 டிச. –மலாக்காவின் துரியான் துங்கால் பகுதியில் மூவரின் உயிரைக் காவு கொண்ட துப்பாக்கிச் சூடு வழக்கில், விசாரணையை மாற்றக்கூடிய முக்கிய ஆதாரம் போலிசாரின் கையில் கிடைத்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஒருவர் குடும்பத்தினர் ஒப்படைத்த ஆடியோ கோப்பு கொண்ட குறுந்தகடு (சிடி) தேசிய போலிஸ்படைப்பிரிவிடம் சென்றடைந்துள்ளது என்று போலிஸ்படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயில் இன்று தெரிவித்தார்.
அந்த சிடியில், சுட்டுக்கொலை நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பிரதான சந்தேக நபரும் அவரது மனைவியும் நடத்தியதாக நம்பப்படும் தொலைபேசி உரையாடல் பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. இந்த ஆடியோ, குற்றத்தின் முன்னே நடந்த மன நிலை, காரணங்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் செயற்பாடுகள் குறித்து விசாரணைக்கு புதிய திசையை வழங்கக்கூடியதாக கருதப்படுகிறது.
இந்த வழக்கை மேலும் ஆழமாக ஆராயும் நோக்கில், கடந்த டிசம்பர் 3 அன்று புக்கிட் அமான் மட்டத்தில் ஒரு மூத்த அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு அணியை குற்றப் புலனாய்வு துறை அமைத்திருந்தது. அந்தக் குழு தற்போது அனைத்து கோணங்களிலும், தொழில்முறை முறையில், எந்தத் தலையீடும் இல்லாமல் விசாரணைகளை முன்னெடுத்துவருகிறது என முகமட் காலித் தெரிவித்தார்.
-யாழினி வீரா



