
படம் : கூகுள்
லண்டன், 10மார்ச்- இசையமைப்பாளர் இளையராஜா, தனது முதல் சிம்பொனி இசையை லண்டனில் நேற்று அரங்கேற்றம் செய்தார். ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி, அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
இளையராஜா, தமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சிம்பொனி இசை அமைக்க வேண்டும் என்பது அவரது நீண்டகால கனவாக இருந்தது. அதன் தொடக்கமாக கடந்த 1986-ல் ‘ஹவ் டு நேம் இட்’ என்ற இசை ஆல்பத்தை அவர் உருவாக்கினார்.
சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் மார்ச் 8-ம் தேதி அரங்கேற்றம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி லண்டன் சென்ற இளையராஜா, இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 12.30 மணிக்கு அங்குள்ள ஈவென்டிம் அப்போலோ அரங்கில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்தார். இதன்மூலம், ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி, அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை இளையராஜா படைத்துள்ளார். இசை ஜாம்பவான்கள் மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகிய சிம்பொனி இசைக் கலைஞர்கள் வரிசையில் இளையராஜாவும் இணைந்துள்ளார்.
-ஶ்ரீஷா கங்காதரன்