
புத்ராஜெயா, 5 மார்ச் — முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் (MACC) வாக்குமூலம் அளிக்க இருந்த நிலையில், அவரது உடல்நிலை காரணமாக அது வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் அறிவித்தனர். தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி, இஸ்மாயில் சாப்ரி இன்று காலை புத்ராஜெயா MACC அலுவலகம் வருவார் என்று முன்பே அறிவித்திருந்தார். ஆனால், அவரது உடல்நிலை சற்றே பாதிக்கப்பட்டிருப்பதால், விசாரணை சில நாட்கள் பின்னுக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராக இருந்தபோது, Keluarga Malaysia கொள்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள விளம்பர நடவடிக்கைகளுக்காக RM 700 மில்லியன் செலவிடப்பட்ட விவகாரம் தொடர்பாக, இஸ்மாயில் சாப்ரி இரண்டாவது முறையாக வாக்குமூலம் அளிக்கவுள்ளார். இந்த விவகாரத்தில், MACC உத்தரவின்படி, பிப்ரவரி 10-ஆம் தேதி தனது சொத்து விவரங்களை அறிவித்த அவர், பிப்ரவரி 19-ஆம் தேதி முதன்முதலில் விசாரணைக்காக ஆஜரானார். அதன் பிறகு, அவர் வீட்டில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே விவகாரத்தில், இஸ்மாயில் சாப்ரியின் முன்னாள் அதிகாரிகள் நால்வரின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, RM 170 மில்லியன் ரொக்கப் பணமும், RM 7 மில்லியன் மதிப்பிலான 16 தங்கக் கட்டிகளும் MACC அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் கூடுதல் விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன, மேலும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-காவியா கிருஷ்ணன்