
புலாவ் பினாங், 23 அக். –
புலாவ் பினாங் மாநிலத்தின் Jalan Tun Sardon பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவால், அந்தச் சாலை அடுத்த இரு நாட்களுக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநிலப் பொறியியல் துறை (JKR) கூறியதாவது, சாலைப்பகுதியில் சிதைந்த மணல் மற்றும் விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளன. நிலம் சீராகப் பராமரிக்கப்படும்வரை சாலை திறக்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.
நிலச்சரிவு “அஞ்சுன் இந்தா” மலைப்பகுதியில் ஏற்பட்டதாகவும், பெருமழை காரணமாக மண் தளர்வடைந்து சாலைப் பாதையில் சரிந்ததாகவும் கூறப்படுகிறது. எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்றாலும், சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாற்றுச் சாலைகள் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் சாலை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது, மலைப்பகுதிகளில் பயணிக்கும் மக்கள் தற்போது நிலவும் மழைக்காலத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், அவசரத் தேவையில்லாமல் அந்தப் பாதையைத் தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
– யாழினி வீரா



