
புத்ராஜெயா, 20 பிப்ரவரி — மலேசியாவில் வெளிநாட்டவர்கள் தலைமையிலான இணைய மோசடி கும்பலை குடிநுழைவுத் துறை முற்றிலும் முறியடித்துள்ளனர். இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 46 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குடிநுழைவுத் துறை துணை தலைவர் ஜாப்ரி எம்போக் தாஹா தெரிவித்ததாவது, சீனா, இந்தியோனேசியா, மியான்மர், பங்களாதேஷ், லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 23 முதல் 54 வயதுக்குள் உள்ள 46 நபர்கள் நேற்று காலை 11.30 மணியளவில் கோலாலம்பூர், கூச்சாய் லாமா பகுதியில் உள்ள 17 உயர்தர குடியிருப்புகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கைது செய்யப்பட்டனர்.
மூன்று வாரம் கொண்டும் மேற்கொண்ட உளவுத்தகவல் சேகரிப்பு மற்றும் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், இந்த கும்பல் மக்களை மோசடி செய்வதற்காக பல்வேறு இடங்களை தகவல் அழைப்பு மையமாக பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கம், நிலம், பங்கு முதலீடுகள், வெளிநாட்டு பரிவர்த்தனை திட்டங்கள் போன்ற சூழ்ச்சியால் பாதிப்பவர்களை ஏமாற்றியது.
மூன்று மாதங்களாக செயல்பட்ட இந்த மோசடிக் கும்பல் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நபர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் கைத்தொலைபேசி எண்களைத் திரட்டி, அதில் ஆர்வம் காட்டும் நபர்களை மோசடிக் கணக்குகளுக்கு பணம் செலுத்த தூண்டி பின்னர் அவர்களின் தொடர்பை முற்றிலும் துண்டித்து விட்டனர். மேலும், இந்த கும்பல் இணைய சூதாட்டம் மற்றும் இணையக் காதல் மோசடியிலும் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இந்த மோசடிக் கும்பலின் தினசரி லாபம் RM100,000 முதல் RM150,000 வரை இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இதில் பணியாற்றியவர்களுக்கு மாத சம்பளம் RM2,500 முதல் RM3,500 வரை வழங்கப்பட்டதுடன், போலீசார் இரண்டு வலை வழங்கி அடுக்கு, நான்கு மடிக்கணினி, 88 கைத்தொலைபேசிகள், 26 சிம் கார்டுகள் மற்றும் RM100,000 ரொக்கப்பணம் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த வெளிநாட்டு நபர்கள் 1959/63 குடிவரவு சட்டத்தின் 51(5)(b) பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கள்ளத்தனமாக நாட்டில் குடியேறியது, காலவதியான கடப்பிதழ் வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.