
சென்னை – தமிழ் திரையுலகில் தன்னுடைய தனித்துவமான இடத்தை உருவாக்கிக்கொள்ள போராடி வரும் நடிகர் கண்ணா ரவி, “எனக்கான பெரிய வெற்றி நிச்சயம் வரும்” என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
‘கூலி’ திரைப்படத்தில் நடித்திருந்த அவர், தற்போது ‘வேடுவன்’ என்கிற இணையத் தொடரில் கதாநாயகராக நடித்து வருகிறார். அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் இந்தத் தொடர், அவருடைய கலைப்பயணத்தில் முக்கியமான கட்டமாக இருக்கும் என அவர் நம்புகிறார்.
‘வேடுவன்’ தொடரின் கதை ஒரு சாதாரண மனிதனின் சவால்களையும், அவனுடைய முடிவுகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஆராய்கிறது. இந்தத் தொடர், கண்ணா ரவிக்கு ஒரு பரிசோதனைப் பாதையாகவும், புதிய அனுபவமாகவும் அமைந்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில்:
“சிறிய படம், பெரிய படம் என்று வேறுபாடு இல்லை. மக்களின் மனதில் நிற்கும் படைப்பே உண்மையான வெற்றி. இதுவரை நான் எதிர்பார்த்த அளவுக்கு சில படங்கள் போகவில்லை. ஆனால், இந்தத் தொடர் என்னை அந்த உயரத்துக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்,” என்றார்.
கடந்த சில படங்களில் எதிர்பார்த்த அளவிலான வெற்றி எட்டாத நிலையிலும், இந்த இணையத் தொடர் தான் திரையுலகில் அவருக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்ற உறுதியுடன் இருக்கிறார். ரசிகர்களும், விமர்சகர்களும் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தத் தொடர், கண்ணா ரவியின் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையலாம்.
-ஸ்ரீ


