
க்யோங்ஜூ (தென் கொரியா), 23 அக். –
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு (APEC) 2025-இன் முன்னோட்ட நிகழ்வுகள் தீவிரமாக நடைபெறும் நிலையில், அமெரிக்கா மற்றும் சீனா தலைவர்கள் இம்முறை கலந்துகொள்ளுதல் மாநாட்டின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும் என்று தென் கொரிய பிரதமர் கிம் மின்-சோக் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “அமெரிக்கா மற்றும் சீனா இணைந்து கலந்துகொண்டால், இது பிராந்திய அரசியல் மற்றும் பொருளாதார ஒற்றுமைக்கு வழி வகுக்கும். இதன் மூலம் ஆசிய-பசிபிக் பகுதியில் புதிய வளர்ச்சி காலம் உருவாகும்,” என தெரிவித்தார்.
அமெரிக்கா தலைவர் டொனால்ட் டிரம்ப் வரவிருக்கும் அக்டோபர் 29-30 தேதிகளில் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டு, அங்கு சீன அதிபருடன் சந்திப்பு நடத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இச்சந்திப்பு APEC மாநாட்டிற்கு முன்னோட்ட அடித்தளமாக பார்க்கப்படுகிறது.
தென்கொரியா தனது க்யோங்ஜூ நகரை மாநாட்டின் முக்கிய தளமாக தயாரித்து வரும் நிலையில், பிரதமர் கிம் மேலும் தெரிவித்ததாவது, “இந்த சந்திப்புகள் ஆசிய-பசிபிக் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும், உலகளாவிய அமைதிக்கும் வழிகாட்டும்” எனக் கூறினார்.
சர்வதேச நிபுணர்கள் இதை வரவிருக்கும் APEC மாநாட்டின் முக்கிய திருப்புமுனையாகக் கருதுகின்றனர்.
– யாழினி வீரா



