
கோலாலம்பூர், 05 நவ. – இந்த ஆண்டுக்கான Sijil Tinggi Agama Malaysia (STAM) எனப்படும் உயர்நிலை மதக் கல்வி சான்றிதழ் பரீட்சை நவம்பர் 12 முதல் 24 வரை நாடு முழுவதும் 135 பரீட்சை மையங்களில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 4,443 மாணவர்கள் பங்கேற்கின்றனர் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகத்தின் அறிக்கையில், மாணவர்கள் தங்களது பரீட்சை அட்டவணை, பரீட்சை நேரம் மற்றும் பாடக் குறியீடுகளை சரிபார்த்து, தேவையான அடையாள ஆவணங்களுடன் பரீட்சை மையத்துக்கு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பரீட்சை நடைபெறும் நாள்களில் மாணவர்கள் பள்ளி ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்கவும், சுத்தம் மற்றும் பாதுகாப்பு விதிகளைக் கவனிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அனைத்து பரீட்சை மையங்களிலும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிசெய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பரீட்சை காலத்தில் தாமதமின்றி மாணவர்கள் நேரத்துக்கு முன்னதாக வருவது முக்கியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
STAM பரீட்சை என்பது மதக் கல்வியில் மேல்நிலைக்கு செல்வதற்கான முக்கிய வாயிலாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தங்களது மதபயிற்சி கல்வியை தொடரும் தகுதி பெறுகின்றனர்.
இந்த ஆண்டும் பரீட்சை சிறப்பாகவும் தடையின்றியும் நடைபெற அமைச்சகம் முழுமையான கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. மாணவர்கள் மனஅமைதியுடன் தயாராகி, தங்கள் முயற்சியால் சிறந்த முடிவுகளைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-யாழினி வீரா



