
லேசியாவில் பெயர் பெற்ற நகைச்சுவை நடிகர் சத்தியா, நீரிழிவு நோயால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் அவர் இடது காலின் பெருவிரல் மட்டும் வெட்டப்பட்டிருந்தது. அப்போதைய நிலையில் மேலும் இரண்டு விரல்கள் பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் சந்தேகித்திருந்தாலும், அவை மருந்து சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டன. மேலும் பரிசோதனையில் கால் முழுவதையும் வெட்ட தேவையில்லை எனவும் உறுதிசெய்யப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது அவரது உடல்நிலையில் புதிய சிக்கல் உருவாகியுள்ளது. காயத்திற்கு கட்டு போடச் சென்றபோது, மருத்துவர் கால் பகுதியில் கிருமி இன்னும் பரவி கொண்டிருப்பதை கண்டறிந்தனர். இதனால் உடனடி அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சத்தியாவின் இடது காலை முழங்காலுக்கு கீழ் பகுதி வரை வெட்டும் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
இந்த செய்தியை சத்தியாவின் மகள் உறுதிப்படுத்தியுள்ளார். “என் அப்பாவை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். டாக்டர்கள் கிருமி பரவி விட்டது என்று சொல்லியிருக்கிறார்கள். உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் கூறியுள்ளனர். முழங்காலுக்கு கீழே வரை காலைக் கத்திரிக்கப் போகிறார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.
பி மை பி மை டாங் டூ எனும் தொலைக்காட்சி நகைச்சுவை நாடகத் தொடரின் மூலம் மக்களின் மனதில் நிலைத்திருக்கும் சத்தியா, தற்போது 61 வயதானவர். நீண்ட காலமாகவே நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வருகிறார்.
சத்தியாவின் உடல்நிலை விரைவில் மேம்பட அனைவரும் பிரார்த்திக்க வேண்டுமென அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
-யாழினி வீரா


