
மூவார், 19 செப் – 32 வயதான முன்னாள் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர், தந்தையை தாக்கி காயப்படுத்தியதுடன், குடும்பத்தினரின் வீடும் வாகனங்களையும் தீ வைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஏழு நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரிமாண்ட் உத்தரவை மூவார் மகிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று பிற்பகல் பிறப்பித்தது. சந்தேகநபர் தற்போது சுல்தானா பாத்திமா நிபுணர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மனநல பிரச்சினையால் பாதிக்கப்பட்டதோடு, காயங்களுக்கும் ஆளானதால் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
மூவார் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏ.சி.பி. ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அசீஸ் தெரிவித்ததாவது, சம்பவம் புதன்கிழமை காலை 9.43 மணியளவில் காம்போங் தெங்கா, ஜாலான் பக்ரி பகுதியில் நடந்தது. அந்த நேரத்தில் சந்தேகநபர் தனது 70 வயது தந்தையை கம்பு மற்றும் கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும், தீ வைக்கப்பட்டதில் வீடு, மோட்டார் சைக்கிள் மற்றும் கார் முற்றிலும் சேதமடைந்தன. சேதத்தின் மதிப்பு RM150,000 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
போலீசார் கூறுகையில், சந்தேகநபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் மெத்தாம்பெட்டமின் வகை போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணை குற்றவியல் சட்டம் பிரிவு 436 (தீ வைத்து சேதப்படுத்தல்) மற்றும் பிரிவு 324 (ஆயுதத்தால் காயப்படுத்தல்) கீழ் நடைபெற்று வருகிறது.
-ஸ்ரீ



