
கோலாலம்பூர், 19 அக். –
மலேசியாவின் முன்னணி ஊடக நிறுவனமான நம்பிக்கை குழுமம் நடத்தும் “நம்பிக்கையின் அனைத்துலக வர்த்தக மற்றும் நட்சத்திர விருது விழா 2024” இந்த ஆண்டு இன்னும் பிரமாண்டமாக இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது என்று அந்த நிறுவனத்தின் தலைவரும் தோற்றுநருமான டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால் தெரிவித்தார்.
1997-ஆம் ஆண்டு மாத இதழாக தொடங்கிய நம்பிக்கை குழுமம், 2021-ஆம் ஆண்டு இணைய ஊடகத் துறையில் காலடி வைத்தது. தொடர்ந்து 2022-ஆம் ஆண்டில் முதல் முறையாக நம்பிக்கை விருதுகளை அறிமுகப்படுத்தி 27 பெருந்தகைகளுக்கு கௌரவம் செய்தது. அதனைத் தொடர்ந்து 2023-ஆம் ஆண்டிலும் சிறப்பாக நடத்தப்பட்டது.
தமிழகத்திலிருந்து நடிகை குஷ்பு, இயக்குனர் நித்திலன் (மகாராஜா), ஸ்டண்ட் சிவா ஆகியோரும், மலேசிய பிரபலங்களும் கடந்த ஆண்டில் விருதுகளைப் பெற்றனர்.
இந்த ஆண்டு விழா இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது —
📅 டிசம்பர் 4: சர்வதேச வர்த்தக விருது விழா
📅 டிசம்பர் 5: நட்சத்திர விருது விழா
இரண்டும் கோலாலம்பூரில் உள்ள டேவான் துன் ரசாக், பேங்க் ரக்யாட் மாநாட்டு மண்டபத்தில், இரவு 7 மணிக்கு கோலாகலமாக நடைபெறும்.
முதல் நாள், மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகள், இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றிகரமான வர்த்தகர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.
இரண்டாம் நாள், கலை, மொழி, இலக்கியம், சமூகத் துறைகள் சார்ந்த நட்சத்திர விருதுகள் வழங்கப்படும்.
இந்த முறை 15 கலை விருதுகள், 15 சமூகப் பிரபல விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதிக வாக்குகளைப் பெற்றவர்களுக்கு மக்களின் வாக்கெடுப்பு அடிப்படையில் மொத்தம் 23 விருதுகள் வழங்கப்படவுள்ளன. “மலேசிய மாமனிதர்” துன் சாமிவேலுவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, மேலும் கலைத் துறையின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட இருக்கிறது.
நீதிபதிகள் குழுவில் டத்தோஸ்ரீ தெய்வீகன், டாக்டர் குமரன் (மலாயா பல்கலைக்கழகம்), ராஜேந்திரன் பெருமாள் (தமிழ் எழுத்தாளர் சங்கம்) ஆகியோர் உள்ளனர்.
சிவப்பு கம்பள வரவேற்புடன் தொடங்கும் இவ்விழாவில் சுமார் 500 பிரபலங்கள், கலைஞர்கள் மற்றும் விருந்தினர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பிக்கை குழுமம் திறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் நோக்கத்துடன் இந்த விழாவை தொடர்ந்து நடத்தி வருவதாக டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால் தெரிவித்தார்.
விழா குறித்த மேலதிக விவரங்களுக்கு, நம்பிக்கை செயலகத்தை (📞 018-240 8063) தொடர்பு கொள்ளலாம்.
– யாழினி வீரா



