
கோலாலம்பூர், செப்டம்பர் 19 – இந்தியர்களின் பாரம்பரிய வர்த்தக மையமாகப் போற்றப்படும் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் இன்று, கே.வி.டி கோல்டு & டைமண்ஸ் தங்கமாளிகையின் புதிய கிளை பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்டது.

இது, தங்கதுரை தலைமையிலான கே.வி.டி கோல்டு & டைமண்ஸ் நிறுவனத்தின் நான்காவது கிளை ஆகும். தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்கனவே இரண்டு கிளைகள் வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில், லிட்டில் இந்தியா பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் இன்று புதிய தங்கமாளிகை தனது கதவுகளைத் திறந்துள்ளது.

இந்த பிரமாண்ட திறப்பு விழாவை, மஇகா துணைத் தலைவர் மற்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன், ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் தான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா ஆகியோர் இணைந்து அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர். மேலும், மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், சிலாங்கூர் மாநில மஇகா தலைவர் டத்தோ சங்கர் ஐயங்கர், மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் டத்தோ சுரேஸ் கோவிந்தசாமி, மலேசிய பொற்கொல்லர் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் டத்தோ ஹாஜி ரசூல் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

தனது வாழ்வை நகைக்கடை ஊழியராகத் தொடங்கி இன்று பல கிளைகளின் உரிமையாளராக வளர்ந்துள்ள தங்கதுரையைப் பாராட்டிய டத்தோஸ்ரீ எம். சரவணன், “அவரது உழைப்பும் உறுதியும் இன்னும் பல வெற்றிகளை உருவாக்கும்” எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய டத்தோ ஹாஜி ரசூல், “இந்தியர்கள் தங்க நகை வியாபாரத்தில் தொடர்ந்து முன்னேறி வருவதற்கான சான்றாக இந்த புதிய கிளை விளங்குகிறது” என தெரிவித்தார்.
புதிய கிளையில் அனைத்து வடிவமைப்புகளிலும் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர் தங்கதுரை தெரிவித்தார்.
-யாழினி வீரா



