
குவா மூசாங், 18 நவ. – குவா மூசாங்–ஜெலி வழித்தடத்தின் கிலோமீட்டர் 35 பகுதியில் ஏற்பட்ட பெரிய அளவிலான நிலச்சரிவு காரணமாக முக்கிய இணைப்புச் சாலை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பழைய வடிகால் அமைப்பு சேதமடைந்து, நிலத்தடி நீர் வேகமாக நகர்ந்து சாலையடிப் பகுதி பலவீனமடைந்தது. இதனால் சுமார் 15 மீட்டர் பரப்பளவில் நிலம் சரிந்து சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இந்த சம்பவம் அருகிலுள்ள எட்டு கிராமங்களில் வசிக்கும் 3,000-த்துக்கும் மேற்பட்ட மக்களை நேரடியாக பாதித்துள்ளது. வேலைக்குச் செல்லும் மக்கள், பள்ளி மாணவர்கள், மருத்துவ அவசர வாகனங்கள் ஆகிய அனைத்துக்கும் பயணத்தடை ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக அமைக்கப்பட்ட மர-கல் இணைப்புப் பாதையும் தொடர்ச்சியான மழையால் மேலும் சுமார் 30 மீட்டர் அளவிற்கு இடிந்து விழுந்ததால், மாற்றுச் சாலைகளையே மக்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
JKR மற்றும் மாவட்ட அதிகாரிகள் பாதுகாப்பு மதிப்பீடுகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். புனரமைப்பு பணிகளைத் தொடங்குவதற்கு முன் மண் நிலைத்தன்மை, நீரோட்டம், புதிய வடிகால் வடிவமைப்பு ஆகியவை முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சீரமைப்பு நேரம் எடுக்கும் வாய்ப்பு அதிகம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் தற்போது மாற்றுச் சாலையான FT066, சுங்கை சாம்–ஜெலி பாதையைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பு முன்னுரிமை என அதிகாரிகள் கூறினர்.
-யாழினி வீரா



