
கோலாலம்பூர், 6 ஜூலை: தலைநகர் கோலாலம்பூரில், மலேசிய இந்தியக் கலைஞர்களின் நலனுக்காக கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து சேவை செய்து வரும் மலேசிய இந்தியக் கலைஞர் நற்பணி இயக்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.
இயக்கத்தின் தலைவராக செயல்பட்டு வரும் திரு சுகன் பஞ்சாட்சரம் மற்றும் இயக்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து, மருத்துவ உதவி, ஓய்வுதவி, மரணசகாய நிதி போன்ற பல வகையான நலத்திட்டங்களை, கட்டுப்பாடுகளின்றி நேர்மையாக கலைஞர்களுக்காக நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டுக் கூட்டத்தின் சிறப்பு அங்கமாக, காலமான கலைஞர்கள் திரு அம்பாங் சுப்ரா மற்றும் சுருளி நடராஜன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு மரணசகாய நிதி வழங்கப்பட்டது.
அமைப்பின் முக்கிய நெறிமுறையாக, உறுப்பினர்களிடமிருந்து பெறப்படும் ஆண்டு சந்தாவின் மூன்று மடங்கான தொகை, அவர்களின் குடும்பத்திற்கே நிவாரணமாக வழங்கப்படுகிறது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட உறுப்பினர்கள், இயக்கத்தின் பணி குறித்து பாராட்டும் வகையில் கருத்துகள் தெரிவித்தனர். மேலும், கலைத் துறையில் உள்ளவர்கள் இவ்வியக்கத்தில் தயங்காமல் இணையலாம் என்றும் இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு, கலைஞர்களின் வாழ்வாதார பாதுகாப்புக்காக மலேசியாவில் ஒரு சிறந்த மாதிரியாக திகழ்கிறது.
-யாழினி வீரா



