Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

அன்வார் – லூலா நட்புக் கூட்டம்: நீதி, சமத்துவம் நோக்கிய ஒற்றுமை உறுதி

கோலாலம்பூர், 25 அக். – ஆசியான் உச்சிமாநாட்டின் முக்கிய நாளில் மலேசிய பிரதமர் தத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா இடையிலான சந்திப்பு “நட்பின் சின்னமாகவும், ஒரே நோக்குடன் இயங்கும் தலைவர்களின் உறுதிமொழியாகவும்” அமைந்தது.

அன்வார் தனது உரையில், லூலா ஒரு உலகளாவிய சமூக நீதி போராளி என்றும், தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக போராடி வந்தவர் என்றும் பாராட்டினார். “இது சாதாரண அரசியல் சந்திப்பு அல்ல; இது ஒரே மதிப்புகளைப் பகிரும் இரு நண்பர்களின் சந்திப்பு,” என அன்வார் தெரிவித்தார்.

இரு நாடுகளின் தலைவர்களும் பல துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான புதிய வாய்ப்புகளைப் பற்றிப் பேசினர். அதில் தொழில்நுட்பம், வேளாண்மை, உணவு பாதுகாப்பு மற்றும் வணிக ஒத்துழைப்பு போன்ற துறைகள் முக்கிய இடம் பெற்றன. மேலும், பிரேசிலிலிருந்து மலேசியாவிற்கு உணவுப் பொருட்கள் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப வணிகம் விரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்வார் மேலும் கூறியதாவது, “லூலா போன்ற தலைவர்கள் உலகிற்கு ஒரு நம்பிக்கை — நீதி, சமத்துவம், மனிதத்துவம் ஆகியவற்றை அரசியலில் இணைத்து காட்டியவர் அவர்,” எனக் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாது, தென் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கிடையிலான புதிய பொருளாதார ஒத்துழைப்புக்கான கதவையும் திறக்கின்றது.

மலேசியா மற்றும் பிரேசில் இரண்டும் வளர்ச்சி நாடுகளாக இருந்தாலும், மனிதநேயம் மற்றும் நீதி சார்ந்த அரசியல் நோக்கங்களில் ஒரே திசையில் இயங்குகின்றன என்பது இச்சந்திப்பின் முக்கியப் பொருள்.

-யாழினி வீரா

Scroll to Top