
கோலாலம்பூர், அக். 31 – ஊடகங்களின் சுதந்திரமும் பத்திரிகையாளர்களின் கேள்வி கேட்கும் உரிமையும் எந்த அரசின் அடிப்படை ஜனநாயகக் குணாதிசயத்திலும் முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாஸில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, ஒரு அமைச்சர் அல்லது அரசுத் தலைவர் எந்தவொரு பத்திரிகையாளரின் கேள்விக்கும் மரியாதையுடனும் பொறுமையுடனும் பதிலளிக்க வேண்டும். ஊடகம் அரசை விமர்சிப்பது தவறு அல்ல; அது ஒரு பொது பொறுப்பு, மக்கள் அறிந்துகொள்ளும் உரிமையைப் பாதுகாப்பதற்கான கடமை எனவும் அவர் வலியுறுத்தினார்.
சமீபத்தில் சில அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்களிடம் காட்டிய மரியாதையற்ற அணுகுமுறைகள் குறித்து கேள்வி எழுந்ததை அடுத்து, ஃபஹ்மி இதை அமைச்சரவை கூட்டத்திலும் எடுத்துரைத்ததாக கூறினார். “ஊடகங்களுடன் நெருக்கமான, வெளிப்படையான உறவு தேவை. பதிலளிப்பதில் தாமதமோ தவிர்ப்போ இருக்கக்கூடாது. பத்திரிகையாளர் கேள்வி கேட்பது குற்றம் அல்ல,” என அவர் குறிப்பிட்டார்.
அதோடு, ஊடகம் தரும் செய்திகளில் துல்லியமும் நம்பகத்தன்மையும் முக்கியம் என்பதையும் அவர் நினைவூட்டினார். “அரசு-ஊடகம் உறவு எப்போதும் பரஸ்பர மரியாதை அடிப்படையில் இருக்க வேண்டும். அது தான் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம்,” என்று ஃபஹ்மி கூறினார்.
ஊடக பணியாளர்கள் தங்கள் கடமையைச் செய்வதில் தடை அல்லது அச்சம் இல்லாமல் செயல்படக் கூடிய சூழலை உருவாக்க அரசும் முழு ஆதரவு வழங்கும் என்று அவர் உறுதியளித்தார்.
-யாழினி வீரா



