
கோலாலம்பூர், 31 அக். – ஸ்ரீ கம்பாங்கில் நடந்த கொடூரச் சம்பவம் ஒன்று மலேசியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் முழுவதும் நிர்வாணமாகவும், கைகள் பின்புறம் கட்டப்பட்டும் காணப்பட்ட பெண் ஒருவர் மரணமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் நடந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது. ஒரு பொதுமகன் குப்பை தொட்டி அருகே சந்தேகத்துக்கிடமான பொருள் இருப்பதை கவனித்து, உடனே அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
பின்னர் விசாரணையில், பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது கைகள் கட்டப்பட்டு, உடலில் காயங்கள் காணப்பட்டதாகவும், உடல் முழுவதும் ஆடை அற்ற நிலையில் இருந்ததாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.
செலங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைனி ஓமர் கூறியதாவது, இச்சம்பவம் தொடர்பாக 25 முதல் 30 வயதுக்குள் மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு கொலைக்கான பிரிவான Seksyen 302 Kanun Keseksaan கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் தற்போது குற்றத்தின் துல்லியமான காரணத்தையும், சம்பவம் நடைபெற்ற நேரத்தையும் உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. துல்லியமான முடிவு கிடைக்கும் வரை, போலீஸ் பொதுமக்களிடம் எந்தவித ஊகங்களும் பரப்ப வேண்டாமென கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-யாழினி வீரா



