
சென்னை, 24 அக். –
தமிழ் திரைப்பட இசை உலகின் பெருமைமிகு நாயகனான இசைஞானி இளையராஜா, தனது இசை உரிமை மீறப்பட்டதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், சமீபத்தில் வெளியான ‘டூட்’ என்ற திரைப்படத்தில், தனது இரு பாடல்களின் மெட்டுகள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் இசை நிறுவனம் ஆகியோருக்கு எதிராக சட்டநடவடிக்கை கோரப்பட்டுள்ளது.
இளையராஜா தனது புகார் மனுவில், “நான் அமைத்த இசை எவராலும் அனுமதியின்றி பயன்படுத்த முடியாது. இது கலைஞரின் அடிப்படை உரிமைக்கு எதிரான செயல்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இது முதல் முறையல்ல — இதற்கு முன்பும் பல திரைப்படங்களில் அவரது பாடல்கள், வணிக நோக்கில் மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டதாகக் கூறி பல முறை நீதிமன்றத்தில் அவர் தனது குரலை எழுப்பியுள்ளார்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு அடுத்த அமர்வை அறிவித்துள்ளது. இதனால் தமிழ் சினிமா உலகில் மீண்டும் இசை உரிமை குறித்த விவாதம் எழுந்துள்ளது.
திரையுலக நிபுணர்கள் கூறுவதாவது, “இளையராஜாவின் இந்த நடவடிக்கை, எதிர்காலத்தில் இசை உரிமைகளுக்கான சட்ட அடிப்படையை வலுப்படுத்தும் வகையில் இருக்கும்” என.
மலேசிய தமிழ் இசை ரசிகர்களும் இதை ஆழ்ந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர். ஏனெனில் இசை உரிமை பாதுகாப்பு என்பது உலகம் முழுவதும் உள்ள கலைஞர்களுக்கான அடிப்படை நியாயமாகும்.
-யாழினி வீரா


