
கோலாலம்பூர், 13 நவ. – மலேசிய தமிழ் நாடக உலகில் புதிய அலைபாய்ச்சலாக “உறவுகள்” எனும் மேடை நாடகம் வரும் மார்ச் 1, 2026 அன்று டான் ஸ்ரீ சோமா அரங்கில் முதல் முறையாக மேடையேறவுள்ளது. இதன் எழுத்து, திரைக்கதை மற்றும் இயக்கம் என மூன்று பொறுப்புகளையும் கலைஞர் பூச்சி ரவி தாமே ஏற்றுள்ளார்.
இந்நாடகத்தின் அறிமுக விழா இன்று மிக விமரிசையாக நடைபெற்றது. மலேசிய கலை கலாச்சார இயக்கம் மற்றும் தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் கலை கலாச்சார அறவாரியத்தின் ஆதரவுடன், மலேசிய முத்தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறது.
நாடகத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி. மணிவாசகம், நிர்வாக தயாரிப்பாளர் கரு. பன்னீர்செல்வம் மற்றும் ஆலோசகர் பாஸ்கரன் (பாஸ்கி) ஆகியோர் உறவுகள் நாடகத்தை சிறப்பாக உருவாக்க முக்கிய பங்காற்றியுள்ளனர்.
“உறவுகள்” நாடகம் குடும்ப பாசம், தியாகம், புரிதல் போன்ற மனித உறவுகளின் உணர்வுகளை மையப்படுத்தி அமைந்துள்ளது. மக்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு காட்சியும் நயமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் பூச்சி ரவி தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ ப. சகாதேவன், கலை வளர்ச்சிக்காக ரூ.5,000 நிதியுதவி வழங்கி, எதிர்காலத்திலும் மேலதிக ஆதரவளிக்க உறுதி தெரிவித்துள்ளார்.
இந்த நாடகம் மலேசிய தமிழ் மேடை உலகில் புதிய யுக்தி மற்றும் உணர்ச்சி நிறைந்த திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-யாழினி வீரா



