
கோலாலம்பூர், நவ. 3 – சிங்கப்பூரில் மரண தண்டனைக்கு உள்ளான மலேசியர் பன்னீர் செல்வம் பிரந்தமன் மீதான தீர்ப்பு, அந்த நாட்டின் சட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப நிறைவேற்றப்பட்டதாக மலேசிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகம் கூறியதாவது, பண்ணீர் செல்வம் 2014ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, 2017ஆம் ஆண்டில் அந்த நாட்டின் உயர்நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டார். அவரது தீர்ப்பை மீளாய்வு செய்ய பல முறை முறையிட்டிருந்தாலும், அவை எல்லாம் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய அரசு அவரது வழக்கு சம்பந்தமாக பல முறை நயதூது அடிப்படையில் சிங்கப்பூர் அரசுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், இது மனிதாபிமான அடிப்படையில் செய்யப்பட்டதாகவும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. எனினும், சிங்கப்பூர் அரசு தமது சட்டத்தின்படி தீர்ப்பை நடத்த உறுதியுடன் நிற்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகம் கூறியதாவது: “ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி நீதித்துறை அதிகாரம் உள்ளது. மலேசியர்கள் வெளிநாட்டில் குற்றங்களில் சிக்கினால், அந்த நாட்டின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று விளக்கம் அளித்தது.
பன்னீர் செல்வத்தின் இறுதி தண்டனை செயல்படுத்தப்பட்ட பின்னர், அவரது குடும்பத்தினர் மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மரண தண்டனைக்கு எதிராக சமூக மட்டத்தில் மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.
இச்சம்பவம் மலேசியா மற்றும் சிங்கப்பூர் இரு நாடுகளுக்கிடையேயான நீதி முறை மற்றும் மனிதாபிமான நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்யும் பாதையில் மீண்டும் ஒரு தொடக்கமாக மாறியுள்ளது.
– யாழினி வீரா



