
அமெரிக்கா, 20 ஜனவரி — அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும். அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசுக்கட்சியின் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து, அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் இன்று (திங்கட்கிழமை) பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவுக்கான கொண்டாட்டங்கள் நேற்று முன்தினம் மாலை வாணவேடிக்கைகளுடன் தொடங்கின.அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா அந்த நாட்டின் நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறவிருக்கிறது. அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழா கேபிடல் கட்டிட வளாகத்தின் திறந்தவெளியில் நடைபெறுவது வழக்கம். ஆனால் அங்கு இன்று கடும் குளிர் நிலவும் என வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டதால், அமெரிக்க அதிபரின் பதவியேற்பு நிகழ்ச்சி கேபிடல் கட்டிடத்தின் ரோட்டுண்டா அரங்கில் நடத்தப்படும் என ட்ரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். ட்ரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க ஏற்கெனவே 2,20,000 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், பதவியேற்பு விழா நிகழ்ச்சி உள்அரங்குக்கு மாற்றப்பட்டதால் அதில் 600 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். அதனால் பதவியேற்பு விழாவின் நேரடி ஒளிபரப்பை ட்ரமப் ஆதரவாளர்கள் பார்ப்பதற்கு கேபிடல் ஒன் விளையாட்டு அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு 20,000 பேர் பங்கேற்க முடியும். புதிய அதிபராக பதவியேற்கும் ட்ரம்ப்புக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமானம் செய்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் பதவியேற்கிறார். பதவியேற்றபின் புதிய அதிபர் ட்ரம்ப் உரையாற்றுகிறார். அடுத்த 4 ஆண்டுகளில் அவர் மேற்கொள்ளவுள்ள திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
– ஶ்ரீஷா கங்காதரன்