
கோலாலம்பூர், 03 நவ. – மலேசியாவின் பிரபல பாடகர் மற்றும் இயக்குனர் நேம்வீ (வீ மெங் சீ) சமீபத்தில் ஒரு ஹோட்டலில் நடைபெற்ற போலீஸ் சோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் துவான் அஷ்மான் பஹ்ரொம்தின் தெரிவித்துள்ளார்.
அவர் மீது நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையில் நான்கு வகையான போதைப்பொருட்கள் — அம்பெட்டமைன், மெத்தஅம்பெட்டமைன், கேடமின் மற்றும் THC — ஆகியவற்றுக்கு நேர்மறையான முடிவு (Positive) வந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஹோட்டல் அறையில் நடந்த சோதனையில் சுமார் 5.12 கிராம் எக்ஸ்டசி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நேம்வீ மீது இரண்டு தனித்தனியான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதலாவது, போதைப்பொருள் வைத்திருத்தல் குற்றம் (பிரிவு 39A(1)), இரண்டாவது, போதைப்பொருள் பயன்படுத்தல் குற்றம் (பிரிவு 15(1)(a)) ஆகும்.
நீதிமன்றத்தில் அவர் தன்னை குற்றமற்றவர் என கூறியுள்ளார். இதையடுத்து நீதிமன்றம், ஒவ்வொரு வழக்கிற்கும் ஆர்.எம். 4,000 ஜாமீன் மற்றும் ஒரு உள்ளூர் நபரின் உறுதிப்பாட்டை நிபந்தனையாக விதித்துள்ளது.
இந்த வழக்கு வரும் டிசம்பர் 18ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களும், குறிப்பாக பொது வாழ்வில் உள்ள பிரபலங்களும், சட்டத்தையும் ஒழுங்கையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-யாழினி வீரா



