
சிப்பாங், 26 ஜூன்: சைபர் ஜெயாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 20 வயதான மாணவி ஒருவர் தங்கியிருந்த ஹாஸ்டலில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு சொந்தமான பல முக்கியமான பொருட்கள் காணவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவிக் கமிஷனர் நோர்ஹிசாம் பஹமான் கூறியதாவது, “மாணவியின் கைத்தொலைபேசி , மடிக்கணினி, ஏடிஎம் கார்டு மற்றும் பணம் ஆகியவை தற்போது காணப்படவில்லை. இது தொடர்பான விரிவான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன,” என்றார்.
தற்போது சம்பவம் நடந்த இடத்திலிருந்து சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமல்லாது, சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
“பொதுமக்கள் இந்த வழக்கில் போலீசுக்கு இடம் கொடுத்து, ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது போன்ற கொலை வழக்குகளில் உண்மை விரைவில் வெளியே வரும்,” என ACP நோர்ஹிசாம் தெரிவித்தார்.
இந்த கொலைக்கு காரணமானதாக சந்தேகிக்கப்படும் நபரை தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி ASP மொகட் ஹுஸ்னி ஹுஸைனை 012-9307860 என்ற எண்ணில் தொடர்புகொள்வதோடு, அருகிலுள்ள போலீஸ் நிலையத்திலும் தகவல் வழங்கலாம்.
போலி செய்திகள், வதந்திகள் பரவாமல் இருக்க பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-வீரா இளங்கோவன்



