
கோலாலம்பூர், அக் 28 – மலேசிய அரசின் சுங்கத்துறை (JKDM) செலாங்கர் கிளை, அனுமதியில்லாமல் சேமித்து வைக்கப்பட்டிருந்த 14 இறக்குமதி வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளது.
இந்த நடவடிக்கை கடந்த செப் 9 அன்று கிள்ளானில் உள்ள ஒரு வாகனக் கிடங்கில் மேற்கொள்ளப்பட்டது. அந்த இடத்தில் சட்டவிரோதமாக கையிருப்பில் வைக்கப்பட்டிருந்த பல உயர் தர இறக்குமதி கார்கள் கண்டறியப்பட்டன.
சுங்கத்துறை தரப்பின் தகவலின்படி, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் மொத்த மதிப்பு சுமார் RM3.34 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. விசாரணையில் அந்த கிடங்கின் வர்த்தக உரிமம் காலாவதியானதும், தேவையான இறக்குமதி ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாததும் தெரியவந்தது.
செலாங்கர் சுங்க இயக்குநர் மொஹமட் அஸ்ஹார் அஹ்மத் பஹராஜி கூறுகையில், “இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டத்தை மீறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” எனத் தெரிவித்தார்.
சுங்கத்துறை தற்போது சம்பந்தப்பட்ட நபர்களின் வணிகப் பின்னணியும் இறக்குமதி வழித்தடங்களும் ஆராயப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
-யாழினி வீரா



