
கோலாலம்பூர், 12 செப்டெம்பர் – கோலாலம்பூர்: மலேசிய உள்நாட்டு வரித்துறை (எல்.எச்.டி.என்) 2024 ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை மேற்கொண்ட ஆய்வில், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து மொத்தம் RM16.95 பில்லியன் வரித்தவிர்ப்பு செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், எல்.எச்.டி.என் தெரிவித்ததாவது, 321 தனிநபர்கள் RM1.75 பில்லியன் வரி செலுத்தாமல் இருந்ததோடு, 1,033 நிறுவனங்கள் RM15.2 பில்லியன் வரி நிலுவையில் வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இத்தகவல், விரிவான அபாய மதிப்பீடு மற்றும் வரி பகுப்பாய்வின் மூலம் அடையாளம் காணப்பட்டது.
மேலும், சேகரிக்கப்பட்ட தரவுகள், நவீன தொழில்நுட்பங்கள், மற்றும் பல்வேறு அமலாக்க அமைப்புகளுடன் இணைந்த செயல்பாடுகள் மூலம், கண்காணிப்பு மற்றும் விசாரணை வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எல்.எச்.டி.என் தலைமை நிர்வாக அதிகாரி தத்துக் அபூ தாரிக் ஜமாலுத்தீன் கூறியதாவது:
“வரி செலுத்துவோர், ஆடிட் அல்லது விசாரணையின் மூலம் குற்றம் வெளிப்படுவதற்கு முன், தாமாகவே சட்டப்படி வரி செலுத்த வேண்டும். இல்லையெனில், அதிக அபராதமும் சட்டநடவடிக்கையும் சந்திக்க வேண்டி வரும்,” என்றார்.
அவர் மேலும், “புதுமையான தொழில்நுட்பங்கள், தொடர்ச்சியான கண்காணிப்பு, மற்றும் திடமான சட்ட அமலாக்கம் மூலமாக, நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் ஆதரவாக, நியாயமான மற்றும் வலுவான வரி அமைப்பு உருவாக்கப்படும்” என்று வலியுறுத்தினார்.
– யாழினி வீரா



