
கோலாலம்பூர், 1 செப்டம்பர் 2025 – உலகத் தமிழர் பண்பாட்டு அமைப்பு (WTCO) மலேசியா தனது பிரமாண்ட தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் 16 செப்டம்பர் 2025, செங்கா கன்வென்ஷன் ஹால், பத்து கேவ்ஸில் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளது.
நேற்று கிள்ளான் எஸ்டெல்லா ஹோட்டலில் இவ்விழாவின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. தமிழர் பாரம்பரியம், கலாச்சாரம், தொழில் மற்றும் வணிக வாய்ப்புகளை ஒருங்கிணைக்கும் ஒரு தனித்துவ தளமாக இது அமைய உள்ளது.
WTCO தலைவர் டத்தோ டாக்டர் கோபாலகிருஷ்ணன், “இந்த தொடக்க விழா எங்கள் பண்பாட்டு அடையாளத்தை கொண்டாடும் நிகழ்ச்சி மட்டுமல்ல; உலகத் தமிழரை இணைக்கும் ஒரு பாலமாக அமையும். உரையாடல், கூட்டாண்மை, ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் மைல்கல்லாக WTCO மலேசியா திகழும்,” என்று தனது கருத்தை பகிர்ந்தார்.
விழாவின் போது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழா மற்றும் தொழில்முறை சந்திப்பு அமர்வுகள் நடைபெறும். தமிழர் சமூகத்திற்கும் கலாச்சாரத்திற்கும் பங்களித்த சிறந்த தனிநபர்களும் நிறுவனங்களும் விருதுகள் மூலம் கௌரவிக்கப்படுவார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் டாக்டர் எல். முருகன், WTCO தலைவர் டத்தோ டாக்டர் கோபாலகிருஷ்ணன், WTCO மலேசியா அமைப்புக் குழுத் தலைவர் ஏ. பழனிசாமி மற்றும் தேசிய துணைச் செயலாளர் டி. கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். அவர்களின் பங்கேற்பு, இந்நிகழ்ச்சியின் பிரம்மாண்டத்தையும் உலகத் தமிழர் ஒற்றுமையையும் வலியுறுத்துவதாக அமையும்.
இவ்விழா ஒரு சாதாரண நிகழ்ச்சி அல்ல. தமிழரின் வேர்களை, பண்பாட்டு செழிப்பை, உலகளாவிய ஒற்றுமையை பிரதிபலிக்கும் வரலாற்றுப் பொன்னொளி நிறைந்த தருணமாக இது அமைய உள்ளது. மலேசியா முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து, நம் பாரம்பரியத்தின் பெருமையை உலக அரங்கில் வெளிப்படுத்த WTCO இந்நிகழ்வின் மூலம் முன்னெடுப்பு செய்கிறது. வருங்கால தலைமுறையினருக்குத் தமிழரின் அடையாளத்தை பெருமையாகக் கொண்டு செல்லும் விதமாக, இந்த விழா ஒரு மைல்கல்லாக வரலாற்றில் பதியப்போகிறது.
-யாழினி வீரா



