
ஜொகூர் பாரு, 06 நவ. – பொதுப்பணியாளர்கள் சமூக நலனுக்காகவும், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்தவும் தினசரி தளத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் கடமைகளைத் தடுப்பது அல்லது அவமரியாதை செய்வது கடுமையான குற்றமாகும் என்று மலேசிய தன்னார்வப்படை (ரெலா) தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஜொகூர் பாருவில் உள்ள பேருந்து நிலையம் அருகே நடந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு பணியில் இருந்த ஒரு ரெலா உறுப்பினர் மீது சிலர் தவறான வார்த்தைகள் பயன்படுத்தி மிரட்டியதாக வீடியோ ஒன்று வெளியானது. இதுகுறித்து ரெலா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில், ரெலா உறுப்பினர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பொதுப்பணியாளர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்துகொண்டிருக்கும் போது யாரேனும் தடை செய்தால், மிரட்டினால் அல்லது அவமரியாதை செய்தால் அது சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத்தக்க குற்றமாகும் என ரெலா எச்சரித்துள்ளது.
மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட உறுப்பினர் தொழில்முறையிலும் அமைதியுடனும் தனது கடமையை செய்தார் என்றும் ரெலா பாராட்டியுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாதவாறு உறுப்பினர்களுக்கு கூடுதல் வழிகாட்டல் மற்றும் பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தது.
ரெலா பொதுமக்களுக்கு வலியுறுத்தியது என்னவென்றால், கடமையில் இருக்கும் எந்த பொதுப்பணியாளரையும் மரியாதையுடன் அணுகி, சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்பது.
-யாழினி வீரா



