Tazhal Media – தழல் மீடியா

/ Mar 06, 2026
Latest News
tms

இசை, இன, மதம் கடந்து இசைமுரசு நாகூர் ஹனிஃபாவின் நூற்றாண்டு விழா

படம்: ஊடகம்

பண்டார் சௌஜானா புத்ரா, 21 செப்டம்பர் – தன்னுடைய ஆழமான குரலும், உணர்வுப்பூர்வமான பாடல்களாலும் பல தலைமுறைகளின் உள்ளங்களில் இடம்பிடித்த பிரபல கலைஞர் நாகூர் ஹனிஃபாவின் நூற்றாண்டு விழா இன்று சிலாங்கூர் மாநிலம் பண்டார் சௌஜானா புத்ராவில் உள்ள மஹ்சா பல்கலைக்கழகத்தில்盛மாக நடைபெற்றது.

நாகூர் ஹனிஃபா தனது பாடல்களின் மூலம் இஸ்லாமிய நம்பிக்கைகளையும், நபிகள் நாயகத்தின் புகழையும் வலியுறுத்தியவர். ஆனால் மத எல்லைகளைத் தாண்டி, அனைத்து சமூகத்தினரும் ரசித்தார் என்பதற்கான சான்றாக இன்றைய விழாவில் பல மதங்களை சேர்ந்தவர்களும், அதிகமான இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

இந்த விழா இளைஞர்களிடம் நாகூர் ஹனிஃபாவின் வாழ்க்கை பயணத்தையும் கலைப் பங்களிப்புகளையும் கொண்டு சேர்ப்பதே பிரதான நோக்கமாகும் என்று பல்கலைக்கழக தோற்றுநர் செனட்டர் டான் ஸ்ரீ டாக்டர் முஹமட் ஹனிஃபா அப்துல்லா குறிப்பிட்டார். “இசை மொழியையும், மனிதநேயத்தையும் முன்னிறுத்தும் ஒரு சக்தி. இன்று கலந்து கொண்டோர் அனைவரும் அதற்கு சான்று,” என்றார் அவர்.

மேலும், ம.இ.கா துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன், “மொழி, மதம், சமயத்தை மீறி அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி நாகூர் ஹனிஃபாவின் இசையில் உள்ளது. அவர் ஓர் முஸ்லிம் கலைஞராக இருந்தாலும், அனைத்து இனங்களும் அவரின் நூற்றாண்டு விழாவில் ஒன்றுபட்டிருப்பது அவரின் மனிதநேயத்தின் சிறப்பைக் காட்டுகிறது” என்று வலியுறுத்தினார்.

நாகூர் ஹனிஃபாவின் நினைவாக இந்தியாவிலும், உள்ளூர் கலைஞர்களும் பாடல்களை வழங்கினர். மேலும் பிரபல பேச்சாளர்களின் உரைகளும் நிகழ்ச்சியின் சிறப்பை அதிகரித்தன.

இந்த விழா, தமிழின் மதிப்பையும் இசையின் சக்தியையும் மீண்டும் உறுதிப்படுத்திய மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்தது.

-யாழின் வீரா

Scroll to Top