
கோலாலம்பூர், 4 நவம்பர் 2025 – மலேசிய முன்னேற்றக் கட்சி (PPP) சார்பில் வருடாந்திர தீபாவளி திறந்த இல்ல விழா வரும் 8 நவம்பர் 2025 (சனிக்கிழமை) அன்று காலை 11.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை, கோலாலம்பூரில் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற உள்ளது.
இந்த விழாவை மலேசிய பிபிபி தலைவர் டத்தோ டாக்டர் லோகா பாலா மோகன் தலைமையில், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் இணைந்து நடத்துகின்றனர். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழா, பல இன மக்களிடையே அன்பும் ஒற்றுமையும் வளர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
தீபாவளி திருநாளின் ஆனந்தத்தைப் பகிரும் இந்த நிகழ்வில், அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள், ஊடக பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். விருந்தினர்கள் பாரம்பரிய அல்லது வழக்கமான உடையில் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழாவில் வண்ணமயமான கலாசார நிகழ்ச்சிகள், பாரம்பரிய இனிப்பு உணவுகள் மற்றும் சமூக ஒற்றுமையை பிரதிபலிக்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. மேலும், “ஒற்றுமையால் அமைதி, அமைதியால் முன்னேற்றம்” என்ற செய்தியை மையமாகக் கொண்டு விழா நடத்தப்படவுள்ளது.
-யாழினி வீரா



