
கோலாலம்பூர், 25 அக். – வரவிருக்கும் ஆசியான் உச்சிமாநாட்டை முன்னிட்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேசியா வருகை புரிவதுடன், உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் “சீமிக்கொண்டக்டர்” துறை முக்கிய கலந்துரையாடல் தலைப்பாக மாறியுள்ளது.
மலேசியா உட்பட தென்கிழக்காசிய நாடுகள், இத்துறையில் தங்களது நிலையை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் அமெரிக்கா வகிக்கும் தாக்கம், ஆசியான் நாடுகளுக்கு பெரும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மலேசியா முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் துணை அமைச்சர் மஸ்துரா அக்மத் மஸ்தபா தெரிவித்ததாவது, “சீமிக்கொண்டக்டர் துறை இன்றைய டிஜிட்டல் பொருளாதாரத்தின் இதயம். இதனை பாதுகாக்கும் வகையில் நாடுகள் இடையேயான ஒத்துழைப்பே எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளமாகும்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, தற்போதைய சர்வதேச சூழலில் அமெரிக்கா தனது வர்த்தக சட்டங்களின் அடிப்படையில் சில உற்பத்தி நாடுகளுக்கு புதிய வரி தடைகள் விதிக்க முயல்வது, ஆசியான் நாடுகளுக்கு சவாலாக இருக்கிறது. அதேசமயம், இந்த நிலைமையால் புதிய கூட்டணி வாய்ப்புகளும் உருவாகும் எனக் கூறினார்.
சீமிக்கொண்டக்டர் துறை உலக தொழில்நுட்ப சந்தையின் முக்கிய நரம்பாக இருப்பதால், இதற்கான கொள்கைகள் மற்றும் முதலீட்டுகள் மலேசியா உட்பட பல நாடுகளின் வளர்ச்சியையும் நேரடியாகப் பாதிக்கக்கூடும்.
மலேசியா இந்த வாய்ப்பை பயன்படுத்தி தொழில்நுட்ப மையமாக தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
– யாழினி வீரா



