
கோலாலம்பூர், 9 ஜூன்: இன்று அதிகாலை பசார் செனி மற்றும் பாங்க்சார் இடையிலுள்ள எல்.ஆர்.டி ரயில்வே சுவிட்சில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கெலானா ஜெயா லைன் எல்.ஆர்.டி சேவையில் தாமதம் ஏற்பட்டது என ரேப்பிட் ரெயில் எஸ்டி.என்.பி. தெரிவித்து உள்ளது.
இந்தக் கோளாறு காலை 5.30 மணியளவில் கண்டறியப்பட்டதாகவும், அதன் காரணமாக பசார் செனியில் இருந்து பாங்சார் வழியாக புத்ரா ஹைட்ஸுக்கு செல்லும் ரயில்கள் கையேட்டு முறையில் இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை பயணிகள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனால் ரயில்களின் இயக்க வேகம் குறைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
கோளாறு சரிசெய்யும் பணியில் ரேப்பிட் ரெயில் பொறியியல் குழு தற்போது ஈடுபட்டுள்ளதுடன், பாதுகாப்பிற்காக உதவிப் போலீசாரும் நிலைய பணியாளர்களும் கட்டண தளங்களிலும், காத்திருக்கும் பகுதிகளிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலை குறித்து பயணிகள் தகவல் பெறுவதற்காக ரேப்பிட் கேஎல் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பயணிகளின் பொறுமைக்கும் ஒத்துழைப்பிற்கும் ரேப்பிட் ரெயில் நன்றி தெரிவித்துள்ளது.
-யாழினி வீரா



