
சிலியாவ், 12 நவ. – பிராட்வெல் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ‘பகடிவதை இல்லை’ எனும் தலைப்பில் ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வு, போலீஸ் மற்றும் போக்குவரத்து துறையின் இணைப்புடன் சிறப்பாக நடை பெற்றது.
நிகழ்ச்சியின் போது மாணவர்கள், பகடிவதை அல்லது நண்பர்களை துன்புறுத்தும் செயல்கள் எவ்வாறு சட்டவிரோதமானவை என்றும், அவை ஏற்படுத்தும் தீய விளைவுகள் என்ன என்பதையும் விரிவாக அறிந்தனர். போலீஸ் அதிகாரிகள் மாணவர்களிடம் மரியாதை, ஒற்றுமை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

மேலும், மாணவர்கள் போலீஸ் மற்றும் போக்குவரத்து துறையினரின் வாகனங்கள், உபகரணங்கள் ஆகியவற்றை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றனர். இது அவர்களில் பாதுகாப்பு சேவைகள் குறித்த ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் அதிகரித்தது.
பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாவது, இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களிடையே நல்ல நடத்தை, சமூகப் பொறுப்பு மற்றும் பிறரை மதிக்கும் மனப்பாங்கு உருவாகும் என நம்பப்படுகிறது.
போலீஸ் மற்றும் போக்குவரத்து துறையினரின் ஒத்துழைப்புக்கு பள்ளி சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.
-யாழினி வீரா



