
கோலாலம்பூர், மே 8: புக்கிட் சுபாங் சிக்னல் அருகே கேத்ரி நெடுஞ்சாலையில் நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் ஏற்பட்ட பல வாகன விபத்துடன் தொடர்புடையதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்தில் இரண்டு பேர் கடுமையாக காயமடைந்துள்ளனர்.
சுங்கை புலோ மாவட்ட காவல் தலைவர் முகமட் ஹபிஸ் முகமட் நோர் கூறுகையில், 31 வயதுடைய லொறி ஓட்டுநர் பத்து ஆராங்கில் இருந்து சைபர்ஜாயாவை நோக்கி சென்றபோது கட்டுப்பாட்டை இழந்துள்ளார் என நம்பப்படுகின்றது.
டாஷ்போர்டு கேமரா (dashcam) காட்சிகள் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில், லாரி முதலில் ஒரு ப்ரோட்டான் சாகாவை மோதி, அந்த வாகனம் அருகில் ஒரே திசையில் சென்ற நான்கு மற்ற வாகனங்களை மோதி விபத்தில் இழுத்ததாக தெரியவந்துள்ளது.
விபத்தில் ப்ரோட்டான் சாகா காரின் 29 வயது பெண் ஓட்டுநரும், பின்பக்க குழந்தை இருக்கையில் இருந்த 4 வயது மகளும் கடுமையாக காயமடைந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் மற்றொரு காரும், ஒரு வேனும், ஒரு பலநோக்கு வாகனமும் அடங்கியுள்ளன.
இந்த விபத்து தொடர்பாக 1987 சாலை போக்குவரத்து சட்டம் பிரிவு 42(1) கீழ் – மோசமான மற்றும் கவனக்குறைவான ஓட்டம் என்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான தகவல் உடையவர்கள் 013-6756317 என்ற எண்ணில் அஸி அஸியான்டி மொக்ட் ரஃபாய் அல்லது 03-61561222 என்ற எண்ணில் சுங்கை புலோ போலீஸ் மையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
-யாழினி வீரா