
திருவண்ணாமலை, 2 நவ. – திருவண்ணாமலையில் வரும் ஐப்பசி பவுர்ணமி தினத்தில் நடைபெறும் கிரிவலத்துக்கான உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த பவுர்ணமி கிரிவலம் நவம்பர் 4 ஆம் தேதி இரவு 9.43 மணியிலிருந்து தொடங்கி, நவம்பர் 5 ஆம் தேதி இரவு 7.27 மணி வரை சிறந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த நேரத்தில் மலையைச் சுற்றி நடப்பது ஆன்மீக பலனை அளிக்கும் என நம்பப்படுகிறது. “மலையே சிவன்” எனப் போற்றப்படும் இந்த திருத்தலத்தில் பவுர்ணமி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்து சிவனைக் கண்டு தரிசிப்பது வழக்கமாகும்.
மேலும், கிரிவலப்பாதையில் பக்தர்கள் பாதுகாப்பாக நடந்து, கூட்ட நெரிசல் மற்றும் பொருள் இழப்பு ஏற்படாதவாறு எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை கிரிவலம் தமிழ் நாட்டின் முக்கியமான ஆன்மீக மரபுகளில் ஒன்றாகும். பவுர்ணமி இரவில் நிலவொளியில் அருணாசல மலைச்சுற்றி பக்தர்கள் நடைபயணம் மேற்கொள்வது, அவர்களது மன அமைதிக்கும் ஆன்மீக சக்திக்கும் பெரும் ஆற்றல் அளிக்கிறது என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.



