
கோலாலம்பூர், அக். 19 – இலக்கியவியல் அமைச்சகம் ஏற்பாடு செய்த 2025 தீபாவளி தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் உட்பட அரசாங்கத் தலைவர்களின் பங்கேற்பு, மலேசியாவின் பல இன, பல மத மக்களிடையேயான ஒற்றுமை மற்றும் குடும்ப உணர்வின் வலிமையை பிரதிபலிக்கிறது என இலக்கியவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.
“தீபாவளி என்பது தீமையை வெல்வதையும், இருளை அகற்றுவதையும் குறிக்கும் ஒளி திருவிழா. இந்த ஆண்டு ‘மடானியின் ஒளி, ஒற்றுமையின் பிரகாசம் (Cahaya MADANI, Sinar Perpaduan)’ என்ற தலைப்பில் நடைபெறும் திறந்த இல்லம், ஒளியுடன் ஒற்றுமையையும் கொண்டாடுகிறது,” என அவர் கூறினார்.

அவர் மேலும், தீபாவளி கொண்டாட்டம் இன, மத எல்லைகளைத் தாண்டி மலேசியா மதானி உணர்வை பிரதிபலிப்பதாகவும், மனிதாபிமானம், நீதி, நம்பிக்கை ஆகிய மதிப்புகள் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் அடிப்படையாக இருப்பதாகவும் வலியுறுத்தினார்.
“ஒற்றுமை என்பது கோஷமல்ல; அது நம்முடைய வாழ்வின் நடைமுறை. அலுவலகத்திலும், டிஜிட்டல் தளத்திலும், அன்றாட வாழ்விலும் இதை வெளிப்படுத்த வேண்டும்,” என அவர் கூறினார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது, இந்திய சமூகமே மலேசியாவின் இதயத் துடிப்பாகும். கல்வி, மருத்துவம், சட்டம், கலை, விளையாட்டு, அரசியல் போன்ற பல துறைகளில் இந்திய வம்சாவளி நிபுணர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளனர்.
அவர் உறுதியளித்ததாவது, மடானி அரசு அனைத்து இனங்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும் கொள்கையில் நிலைத்து நிற்கிறது. இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதாரம் மற்றும் தொழில்முனைவுத் துறைகளில் பங்குபற்றலை வலுப்படுத்த அரசு பல்வேறு நலத்திட்டங்களையும், திறன் மேம்பாட்டு முயற்சிகளையும் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
-யாழினி வீரா



