
சென்னை, 6 ஜூலை: இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருந்துகள் அனைத்தும் கட்டாயமாக இறக்குமதி உரிமம் பெற்றிருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சிங்கப்பூரில் தயாரிக்கப்படும் “கோடரித் தைலம்” என்ற எண்ணெய் சென்னை மந்தைவெளியில் உள்ள ‘ஆக்சென் மார்க்கெட்டிங் இந்தியா’ என்ற நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இந்த எண்ணெய் உரிய அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் பொட்டலங்களை திருப்பித் தர கோரி அந்த நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராம மூர்த்தி, “மருந்துகள் மற்றும் ஒப்பனைப் பொருள்கள் சட்டம், ஆயுர்வேத மருந்துகளுக்கும் பொருந்தும். எனவே, எந்தவொரு மருந்தாக இருந்தாலும் இந்தியாவில் இறக்குமதிக்கு முன் உரிமம் மற்றும் சான்றிதழ்கள் கட்டாயம். பழைய விதிமுறைகளில் மாற்றங்கள் தேவைப்படும்” எனவும் வலியுறுத்தினார்.
அத்துடன், கோடரித் தைலத்தின் தரம் மற்றும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்பட்ட பிறகு அதன் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பாரம்பரிய மருந்துகளும் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறது.
-யாழினி வீரா



