Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

செத்தியா ஆலாமில் வாணிப மையத்தில் துப்பாக்கிச் சூடு – வெளிநாட்டு ஊழியர் காயம்

Picture: Bernama

செத்தியா ஆலாம், 9 பிப்ரவரி — செத்தியா ஆலாமில் உள்ள ஒரு வாணிப மையத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு வெளிநாட்டு தொழிலாளி, நேற்று துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காலில் காயமடைந்தார்.

சிலாங்கூர் போலீஸ் தலைவர், டத்தோ ஹுசேன் ஓமர் கான், 30 வயதிற்குள் உள்ள இந்த வெளிநாட்டு நபர் ஷா ஆலாம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், தற்போது சீரான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

குற்றவாளி, உள்ளூர் நபராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர் நேற்று இரவு 10 மணியளவில் வாணிப மையத்திற்குள் சென்று, அந்த துப்புரவு தொழிலாளியை குறிவைத்து சுட்டதாக போலீசார் தெரிவித்தனர். குறைந்தபட்சம் எட்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்திற்குப் பின்னர், குற்றவாளி ஒரு வாகனத்தை நிறுத்தி, அதிலிருந்து தப்பிச் சென்றதாக தகவல். பின்னர் அந்த வாகனத்தின் ஓட்டுநரை கட்டாயமாக சாலையோரத்தில் இறக்கிவிட்டு தப்பியுள்ளார். ஓட்டுநர் பின்னர் போலீசாருக்கு புகார் அளித்தார்.

குற்றவாளியை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி மொகத் இக்பால் இப்ராஹிம், வாணிப மையத்தில் எந்தவிதமான பாதுகாப்பு ஆபத்தும் இல்லை என்பதையும், இன்றுடன் வணிக நடவடிக்கைகள் வழக்கம்போல் செயல்படும் என்பதையும் உறுதி செய்துள்ளார்.

சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுப்புற பகுதிகளில் போலீசார் விரிவான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். குற்றம் நடைபெற்ற இடத்தில் போலீஸ் மற்றும் நுண்ணறிவு குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிகழ்வின் முழுமையான விசாரணை முடிந்தவுடன், போலீசார் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வீரா இளங்கோவன்

Scroll to Top